Tuesday, May 15, 2007

தூங்காதிரு ...என் துணையாயிரு...

தூங்காதிரு -என்
துணையாயிரு
நீங்காதிரு -என்
நினைவாயிரு

பூங்காவிலே எனக்காய்
நீ காத்திரு
பூங்காற்றிலே என் வாசம்
எதிர்பார்த்திரு

அலைக்காக காத்திருக்கும்
கரையைப் போல காத்திரு
பிள்ளை வரக் காத்திருக்கும்
தாயைப் போல காத்திரு
நிலவுக்காக காத்திருக்கும்
வானம் போல காத்திரு
நீ வரக் காத்திருக்கும்
நான் போல காத்திரு

தூங்காதிரு -என்
துணையாயிரு
நீங்காதிரு -என்
நினைவாயிரு

Monday, May 14, 2007

என்ன அழகு எந்தன் ஊருக்கு...

தென்னை மரத் தோப்புகளும்..
தேக்கு மரச் சாலைகளும்...
என்ன நான் குறைவா?
என வளரந்த கமுகுகளும்...

சின்னவன் தான் எனினும்
சிறப்பானவன் எனவே
சிலிர்த்து காய்த்து நிற்கும்
செவ்விளனீர் மரமும்...

என்ன அழகு எந்தன் ஊருக்கு ?
என்ன குறைவிருக்கு எந்தன் கவிதைக்கு ???

காற்றின் பாட்டுக்கு
தலையாட்டும் நெல்வயலும்...
ஆற்றிசையே பின்னணியாய்
பாட்டிசைக்கும் குயிலினமும்...

சேற்று வயலுகுள்ளும்
சேலை நனையாது
நாற்று நடுகின்ற
நம் பெண்டிர் இடையசைவும்...

காற்றுக்கசையாது
கஞ்சிக் கலயந்தன்னை
ஏற்றித் தலையில் வைத்து
எடுப்பாக நடை போடும்
என்னவளின் நடையழகும்...

என்ன அழகு எந்தன் ஊருக்கு ?
என்ன குறைவிருக்கு எந்தன் கவிதைக்கு ???

[
தொடரும்... ]

Sunday, May 13, 2007

நீயும் என்ன சொல்லுவாய்?

நீ நடக்கும் தெருவைப் பார்த்து
நெஞ்சுக்குள்ளே வேர்க்கிறேன்
நிலவிடம் தினமும்
நீ நலமா என்றும் கேட்கிறேன்

பூவிடம் உன்னைப் பற்றி
கவிதை சொல்லிப் பார்க்கிறேன்
காற்றிடம் உனக்கு தினமும்
ஒரு கடிதம் சேர்க்கிறேன்

பார்க்கின்ற யாவரும் என்னைப்
பைத்தியம் என்றே சொன்னார்கள்
கேட்கின்றேன் பெண்ணே
நீயும் என்ன சொல்லுவாய்?
நீயும் என்ன சொல்லுவாய்?

Friday, May 11, 2007

இளயராஜாவின் இன்னிசையை...

உண்ண மறுக்குது உதடு
உறங்க மறந்தன விழிகள்
வண்ண மலர்களின் வாசம்
வாங்க மறுக்குது மூக்கு
உள்ளம் தொடும் தென்றல் காற்றை
உணர மறுக்குது தேகம்
இளயராஜாவின் இன்னிசையை
இனிக்க மறுத்தன செவிகள்

ஆக ஐம்புலன் அடங்க
அடி என்ன நடந்தது எனக்கு?
உன்னைக் கண்டதன் பின்னால்
அவை அடிமைகள் தானே உனக்கு !!!

Wednesday, May 9, 2007

நீயும் ....நானும்...

சில வேளைகளில் தானடி...
உன்னை மறக்க முடிகிறது !!!
சில வேளைகளிலாவது
உன்னால் என்னை நினைக்க முடிகிறதா ???

தெருவெல்லாம் உன்னைத் தானடி...
தேடிப் பார்க்கிறேன் !!!
என் வீட்டு யன்னலிலாவது
நீ என்னைத் தேடிப் பார்க்கிறாயா???

நாள் தோறும் என் கனவுகளில் ...
நீ தானடி வந்து போகிறாய் !!!
ஒரு நாளாவது உன் கனவில்...
நான் வந்திருக்கிறேனா ???

நீ எறிவதற்காகத் தந்த empty coke can் கூட...
எனக்கு பரிசுப் பொருள் !!!
நான் அன்பாகத் தந்த பரிசுப் பொருட்களில் ஒன்றையாவது...
நீ பத்திரப் படுத்தி இருக்கிறாயா ???

உன் உதட்டால் வரும் ஒவ்வொரு வார்த்தையையும்..
நான் ரசித்துக் கேட்கிறேன் !!!
என்னுடைய கவிதைகளில் ஏதாவது ஒன்றையாவது...
நீ வாசித்துப் பார்திருக்கிறாயா???

Tuesday, May 8, 2007

கடிதைகள்

தெய்வீகக் காதல்
------------------
ஷாஜகானின் 16 வது

காதல் !

தெய்வீகக் காதல் !!!

College கீதை
-------------------
'Exams' ஐ செய் !
'Results' ஐ எதிர் பார்க்காதே !!!

அத்திவாரம்
-------------------
அத்திவாரம்
பலமாக இருக்க வேண்டும்
என்பதற்காக
ஆறாம் வகுப்பில்
ஏழு வருடங்களாய் நான்.


காத்திருப்பு
-------------------
காத்திருப்பது என்னவோ
Bus Stand இல் தான்
ஆனால் Bus இற்காக இல்லை !!!

Mortgage
--------------------
25 வருட கால
வீட்டுச் சிறை !!!

வாழ்க்கை
---------------------
சிலருக்கு நரை !
சிலருக்கு வழுக்கை !!
இது தான் வாழ்க்கை !!!

Sunday, May 6, 2007

புல்லாங் குழலே புல்லாங் குழலே

புல்லாங் குழலே புல்லாங் குழலே
நீயும் ஓர் நாள் மூங்கில் தானே
புது மழையே புது மழையே
நீயும் ஓர் நாள் கடல் நீர் தானே
முழு நிலவே முழு நிலவே
நீயும் ஓர் நாள் மூன்றாம் பிறை தானே
வண்ணத்தியே வண்ணத்தியே
நீயும் ஓர் நாள் மயிர் கொட்டி தானே

நானும் நானும் ஒர் நாள் வளர்ந்திடுவேனே

Friday, May 4, 2007

உயிரின் உருவம் என்னவென்று ...

இருட்டினில் கூட உன் நினைவு
நிழலாய் என்னைத் தொடர்கிறது - என்
இரத்ததின் ஒவ்வொரு துளியினிலும்
உன் பெயரின் முத்திரை இருக்கிறது

நித்திரையிலும் உன் நினைவு
கனவின் உருவினில் வருகிறது - உன்னை
நீங்கி இருந்தால் உன் நினைவு
நெருப்பாய் என்னைச் சுடுகிறது

துடிக்கும் இதயத் துடிப்பிலெல்லாம் - உன்
பெயர் தானடி கேட்கிறது
இதயத்தின் ஓசை என்னவென்றால்
அடி என்னவளே நான் என்ன சொல்வேன்

உயிரின் உருவம் என்னவென்று - இந்த
உலகினில் யாருக்கும் தெரியாது
பல வருடங்கள் நடக்கும் பரிசோதனைக்கு
முடிவுகள் ஏதும் கிடையாது

உயிரின் உருவம் என்னவென்று - இவ்
உலகினில் நான் மட்டும் தெரிந்து கொண்டேன்
என் உயிரின் உருவம் நீ என்று - இவ்
உலகில் யாருக்கும் தெரியாதே

ஒரு தலைக் காதல் இல்லாத ஒரு காதல்

ஓரு தேர்த் திருவிழாவில் தான்
சந்திந்துக் கொண்டோம்
அவளும் தேர் பார்க்கவில்லை
நானும் தேர் பார்க்கவில்லை

காதல் குதிரை கனைக்கப் பார்ததது
கடந்த கால அனுபவங்கள் கடிவாளம் போட்டது

தவறுதலாக நான் தேர் பார்த்தபோது
அவள் காணாமல் போனாள்

இன்னும் ஒரு நாள் லைப்ரரியில் ...
நானும் புத்தகம் தேடவில்லை
அவளும் புத்தகம் தேடவில்லை

தாயுடன் வந்திருந்தாள்
ஆங்கிலம் கலந்த தமிழில் பேசினாள்

தவறுதலாக நான் புத்தகம் தேடியபோது
அவள் காணாமல் போனாள்

நண்பனின் திருமண நாள்

நான் பலகாரம் அடுக்கிக் கொன்டிருந்தேன்
அவள் பலகாரம் கொடுத்துக் கொன்டிருந்தாள்

நானும் திருமணம் பார்க்கவில்லை
அவளும் திருமணம் பார்க்கவில்லை

தாலி கட்டும் நேரம்
எங்களைச் சுற்றி ஒருவரும் இல்லை

அமைதியாக அருகில் வந்தாள்
ஆங்கிலம் கலந்த தமிழில்
தயங்கித் தயங்கித்
தன் காதலைச் சொன்னாள்

பூமி என் தலையில் சுற்றியது...

தோல்விகள் எனக்குப் பழகிப் போனவை தான்
ஆனாலும்
இப்படி ஒரு தோல்வியை நான்
எதிர் பார்க்கவில்லை

ஆம் முதல் முறையாக
ஒரு தலைக் காதல் இல்லாத
ஒரு காதலில் நான் தோற்றுப் போனேன்

அடுத்த மாதம்
எனக்குத் திருமணம்
அமைதியாக
எடுத்துச் சொன்னேன்

கண்களில் நீருடன் அவள்
காணாமல் போனாள்.


Thursday, May 3, 2007

அடி என்ன செய்வதாய் உத்தேசம்???

கடைக் கண் பார்வை நீ தருவாய்..அதில்
காதலின் கொலுசொலி நான் கேட்ப்பேன்...
எடுப்பாய் என் முன் நடை இடுவாய் ..அதில்
என்னை முழுவதாய் நான் மறப்பேன்

நெருப்பாய்ச் சுடுதே உன் நினைவு ..பனிக்
காலம் கூட வேர்க்கிறது..
இருக்கா? உன்னுள் என் நினைவு..அடி
இல்லை என்றால் நான் என்ன செய்வேன்

எத்தனை தடவைகள் பார்த்து விட்டோம் - ஒரு
வார்த்தை ஏனும் பேசவில்லை
அத்தனைக்கும் நீ பொதுவாய் - பாதிப்
புன்னகை கூட வீசவில்லை
ஒரு பித்தனைப் போல் என்னைத் தினம்
நிலைக் கண்ணாடி முன்னே பேச விட்டாய்
இந்தப் பக்த்தனை என் அம்மனும் நீ
அடி என்ன செய்வதாய் உத்தேசம்???


Wednesday, May 2, 2007

மழைத் துளிகள் ஒவ்வொன்றும்...

மழைத் துளிகள் ஒவ்வொன்றும்
உன் பார்வை என்றிருந்தால்...
மழையில் நாள் தோறும்
நனயச் சம்மதம்....

என் கனவுகள் தோறும்
நீ வருவாய் என்றிருந்தால்...
கண்களை மூடிக் கொண்டு
நாள் தோறும் தூங்கச் சம்மதம்....

காற்றாக நான் இருந்து
உன் மூச்சில் கலப்பதென்றால்...
நில்லாது அலைகின்ற
காற்றாகச் சம்மதம்...

நிழலாக உனக்கு
நான் இருக்க முடியும் என்றால்...
நிலத்தோடு தேய்கின்ற
நிழலாகச் சம்மதம்....